சனி, அக்டோபர் 18, 2014

பாறைத்திருவிழா



                                              பாறைத்திருவிழா
        நாற்பதாவது பசுமைநடையை கொண்டாடும் விதமாக பாறைத்திருவிழா சமணர்மலை அடிவாரத்தில் 28.09.14 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     40 வது பசுமைநடையை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் முடிவு செய்து, விழாவிற்கான பெயர், மற்றும் இடம் தேர்ந்து எடுத்தனர். கடந்த ஆண்டை போலவே கீழ்க்குயில்குடி சமணர்மலை அடிவாரத்தில் உள்ள ஆழமரத்தின் கீழ் நடத்துவது என்றும், அதற்கு பாறைத்திருவிழா எனவும் பெயர் முடிவு செய்து இரண்டு மாதமாக அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன, மதுரை நண்பர்கள் பல வழிகளில், வேலைகளை பிரித்து பார்த்துகொண்டனர், பேனர் , அழைப்பிதழ், மதுரை வரலாறு ஆங்கில நூல் தயாரிப்பு பணி, பதாகைகள் தயார் செய்வது, டிசைன் வெட்டி ஒட்டுவது , பலசரக்கு, காய்கறி வாங்குவது என நண்பர்கள் தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
     மதுரை புத்தகதிருவிழாவில் ஸ்டால் போடப்பட்டு நோட்டீஸ் வினியோகம் நடந்தது, ஆனால் எதிலும் நான் பொறுப்பாக இல்லாமல் போனதால் , விழா நடைபெறும் முன் தினம் முழுமையாக பணியாற்ற வேண்டும் எனவும், இரவில் அவ்விடம் தங்கி ஆழமரத்தின் கீழ் அல்லது மலை மீது பேச்சிபள்ளத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிதிரிவது என முந்தினம் மதியம் 12 மணிக்கு சமணர் மலை அடிவாரத்திற்கு வந்தேன் ,   ஆனால் நான் செல்லும்முன்பே பலசரக்கு, காய்கறிகள் வந்து இறக்கி அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து சென்றுயிருந்தனர்.
    நான் சென்ற சில நிமிட இடைவெளியில் மதுமலரன், சுந்தர் வந்தனர், அடுத்து அடுத்து நண்பர்கள் ஹ்யூபர்ட், ராஜண்ணா, கந்தவேல், சதீஷ் வந்துவிட்டனர், மூன்றுமணிக்கு அ.முத்துகிருஷ்ணன் தோழமையில் ஓவியர் ரவி, உதயகுமார், பிரகாஷ், ரகு, வஹாப் ஷாஜகான், மணிகண்டன், சதீஸ் தமிழன், சித்து, மற்றும் வக்கீல் ராபர்ட் தன் துணைவியாருடன் ஒரு பெரும் பட்டாளம் வந்து இறங்கியவுடன் அந்த இடமே களைகட்டியது,
    மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் கைது, பதவி பறிக்கப்பட்டது என்ற செய்தியும் அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்துகள் ஓடுவது நிறுத்தப்பட்டது, கட்சிகாரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எனக்கோ நாளை பாறைத்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகமாக இருந்தது, ஆனால் முத்துகிருஷ்ணனோ விழா கண்டிப்பாக நடக்கும் கவலைபடாதே சகோதரா என நம்பிக்கை இழக்காமல் நம்பிக்கை ஊட்டினார்...
  





    

     விழா நடைபெறும் இடத்தை துப்புறவு தொழிலாளர்கள் சுத்தும் செய்து கொண்டிருந்தனர், சிறிது நேரத்தில் சமையல்காரகள், அதைதொடர்ந்து அரங்க அமைப்பாளர்கள் வந்து இறங்கி பணியை பார்க்க தொடங்கி விட்டனர்.
   நண்பர்கள் பதவி, வசதிகளை மறந்து களபணியாற்றினார்கள் ஒருவர் மினிலாரியில் விறகு வாங்கி வண்டி ஓட்டி வருகிறார், சிலர் தாமரை தடாகத்தில் இறங்கி மக்களால் வீசி எறியப்பட்ட பிளாஷ்டிக் பாட்டில் பேப்பர், என கழிவுகளை சேகரித்து இடத்தை சுத்தம் செய்கின்றனர். அங்கு நடைபெற்ற அசாதரணமான நிகழ்வுகளை பார்த்து கீழக்குயில் மக்கள் சிலர் கூடிவிட்டனர் என்ன ஏதேனும் சினிமா சூட்டிங்கா என் வினைவினார்கள் அவர்களுக்கு பாறைத்திருவிழா என்றதும் அப்படியா என்றனர்,
  சிறிது நேரத்தில் புத்தக பண்டல்கள் வந்து இறங்கின, விழாவில் புகைபட கண்காட்ச்சியை வைக்க ஓவியர் ரவி, ரகு படங்களை ஒட்டும் பணிகளை தொடர்ந்தனர். இப்படி இரவு 10 மணி ஓயாத பணி நண்பர்களுக்கு, அங்கேயே இரவு உணவு தயாரிக்கப்பட்டன.
    பாறைத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே அலகாபாத்தில் இருந்து சுந்தரராசன் சார், சென்னையில் இருந்து முத்துகுமரன் அந்த இரவிலும் அங்கு வந்ததனர், கடந்த விருட்சத்திருவிழாவில் சுந்தரராசன் சார் தான் ஒருங்கினைப்பாளர்களுக்கு  வழிகாட்டியாக இருந்தார், இந்த முறை ஹ்யூபர்ட் சார் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டு களத்தில் இறங்கினார்.
    இரவு 11 மணிக்கு சில நண்பர்கள் காலை வருவதாக விடை பெற்று சென்றனர், நான் , ஹ்யூபர்ட்,  மதுமலரன், கந்தவேல், சதீஸ் மற்றும் சென்னை நண்பர்கள் மட்டும் அங்கு தங்கினோம்.  கடந்த ஆண்டை போல் நாகமலை விலக்கில் இருந்து சமணர்மலை வரை பாறைத்திருவிழாஅரங்கம்வரை  பதாகைகளை மின்கம்பங்களில் கட்ட சென்றோம், நாகமலையில் பதாகைகளை கட்டும் போது ஒரு போலீஸ்காரர் வந்து நீங்கள் யார் என்ன செய்றீங்க என சப்தம் போட்டார். அவருக்கு,  பாறைதிருவிழா பற்றி கூறி விழாவிற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை காட்ட சரிசரி நிலமை சரியில்லை எனவே விரைவாக அமைதியாய் கட்டி விட்டு செல்லுங்க என்றார், அங்கிருந்து சமணர்மலை அடிவாரம் வரை கட்டி வந்தபோது மணி 12.30 ஒரே அசதி ஆழமரத்தடியில் இருந்த சிமிண்ட் மேடையில் படுத்தோம் அசதியில் நான் படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.
   ஆனால் அதிகாலை 3.30 மணிக்கு மழை வந்து எழுப்பிவிட்டது. வேறு இடம் தேடி சென்றால் அங்கு ஏற்கனவே வேறு நபர்கள் இருந்தனர். அப்படியே தூக்க கலக்கத்துடன் மரத்தின் அடியில் ஒதுங்கினேன்.இரவில் மலையை பார்த்தால் மலை இருளில் ஒளிந்து கொண்டது, அடிவாரத்தில் உள்ள கருப்பனசாமி கோவிலில் மட்டும் விளக்கு ஒளியை சிந்த எங்கும் இருள் இருள் அமைதி ஆஹா அந்த பொழுது எவ்வளவு ஆனந்தமான தருணம்.
   காலை ஐந்து மணிக்கு [28.9.14] நான், மதுமலரன், தமிழினி வசந்தகுமார் மூவரும் கீழக்குயில்குடி ஊரின் எல்லையில் உள்ள  குளியல் தொட்டியில் குளித்திவிட்டு விழா இடம் வரும் போது விடிய ஆரம்பித்துவிட்டது. இரவு இருளில் மறைந்த மலை கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்தது. அதே நேரம் மழை வானில் இருந்து கொட்ட அடை மழையாக மாறியது வான் எங்கும் கருமேகங்கள் தான்
    அந்த மழையிலும்  சமையல் காரர்கள் சமையல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர், காலை 6.30 மணி சிறு துளிகளாய் மழை பெய்துகொண்டே இருக்க விழாவிற்கு முதல் நபராக மழையில் நனைந்தவாரே தீபாநாகராணி அவர்கள் தன் கணவர், மகனுடன் வந்து இறங்கினார்கள், அடுத்து அடுத்து அருண், மற்றும் எபி தன் துணைவியாருடன் பைக்கில் வந்து இறங்க எங்களை போல் மழைக்கும் உற்சாகம் அடைந்து மழைபெய்ய ஆரம்பித்தது, என் தங்கை லதா தன் மகள் வித்தியாவுடன், உறவினர் துர்கா தன் மகள்,மற்றும் பெற்றோர்களுடன் வந்து இறங்கினார்கள், மழை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வண்னம் பசுமைநடை ஆர்வலர்கள் பேருந்து ஓடாதநிலையிலும் கார், பைக், ஆட்டோ என குடும்பம் சகிதமாக, நண்பர்கள் படை சூல மழையில் நனைந்துகொண்டே வந்தனர், எங்களுக்கு உற்சாகம் அளித்தது. ஹலோ வேல்ஸ் என அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பிபார்த்தால் நண்பர் எஸ்.அர்ஷியா வந்து இறங்கினார் ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
       வாகனம் ஓடவில்லை, கலவரம் என ஒதுங்கிகொள்ள காரணம் தேடும் நண்பர்கள் மத்தியில் பாறைத்திருவிழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என காலை 5 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு வந்த நண்பர்  முத்துகுமார் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்வு, இவரை பார்த்தாலே நமக்கு உற்சாகம் வந்துவிடும்.
      இப்படி முகம் அறிந்த ,அறியாத நண்பர்கள் வர வர பசுமைநடை நண்பர்களுக்கு ஆனந்தம், 9 மணிக்கு எல்லாம் மழையில் நனைந்த படி சிறப்பு அழைப்பாளர் தியோடர். பாஸ்கரன் தன் சகோதருடன் வந்து சேர்ந்தார்கள்.








  
  9 மணிக்குள் 300 பேர் சேர்ந்துவிட்டனர். அந்த மழையில் மலை நோக்கி, சமணர்மலை செட்டிபுடவு குகை நோக்கி, 40 வது பசுமைநடை புறப்பட்டது,செட்டிப்புடவில் மழையில் நனைந்து கொண்டே மலையின் வரலாற்றை அய்யா.சாந்தலிங்கம் கூறினார்கள்.
   மலையில் இருந்து கீழே இறங்கி வந்தவுடன் காலை உணவு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்பட்டது. மழையில் நனைந்தபடி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பகுளத்தின் தாமரை மலர்களை ரசித்துகொண்டு சாப்பிட்டது பசுமைநடை ஆர்வலர்களுக்கு மட்டும் கிடைத்த பாக்கியம்.
    சரியாக 10.30 க்கு பாறைத்திருவிழா ஆரம்பம்மானது ஒரு பக்கம் வரலாற்று நிகழ்வும் மறுபக்கம் குழந்தைகளுக்கான விழா ஆரம்பித்தது, குழந்தைகள் விழா எனில் அது வெறும் விளையாட்டு அல்ல பன்முக தன்மை கொண்ட விளையாட்டு குழந்தைகளின் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்வு, 
     பாறைத்திருவிழாவை அ,முத்துகிருஷ்ணன் தொடங்கிவைத்தார், பசுமைநடையின் முதல் நடையில் இருந்து பாறைத்திருவிழா வரை கடந்துவந்த வரலாற்றை எளிமையாக எடுத்து கூறினார். நான் 2 வது பசுமைநடையில் இருந்து தொடர்ந்து சுமார் 34 நடைகளில் பங்கேற்றுள்ளேன். என எண்ணும்போது மகிழ்வாகதான் இருந்தது. மதுரை வரலாற்றின் ஆங்கில நூல் அறிஞர்.கிறிஸ்டோபர் ஜெயகரன் வெளியிட்டார்கள், தியோடர்.பாஸ்கரன் தொல்லியல் சார்ந்த உரைவீச்சு பார்வையாளர்களை மயக்கியது என்றால் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடை குடும்பத்தை பற்றியும் அதனால் அவர் அடைந்த மகிழ்வை கேட்கும் போது எங்கள் அகம் மகிழ்ந்தது.
   மதியம் 1 மணிக்கு பாறைத்திருவிழா முடிந்தது, மதிய உணவு வழங்கப்பட்டது பாறைதிருவிழாவில் கலந்து கொண்டவர்களே மற்றவர்களுக்கு உணவு பறிமாற உணவு மேலும் சுவையானது.
   மதிய உணவுக்கு பின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் மாலை 3 மணிவரை விழாவில் கலந்துகொண்டவர்கள் கிளம்ப மனம் இல்லாமல் அங்கேயே இருந்தனர். விழாமுடிவில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தபோது சுமார் 500 பேர். தமிழகத்தின் அசாதாரண சூழ்நிலையில் இந்த மக்கள் கூட்டம் பசுமைநடையை அடுத்த நகர்வை நோக்கி உற்சாகமாக நகர்த்தி செல்லும்.
   விருதுநகர் போக்குவரத்து நண்பர்கள் திரு,பாலசுப்பிரமணியம், ஜான்கென்னடி மகள், மகனுடன், மாரிக்கண்னு மகனுடன், அன்பழகன், கண்ணன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
   விழாவை பற்றி அடுத்தநாளே பத்திரிக்கை முழுவதும் படங்களுடன் செய்தி வந்தது, கலந்து கொள்ளாதவர்கள் வருந்தினர், கலந்துகொண்டவர்களுக்கோ அவர்கள் நினைவில் செதுக்கிய சிற்பங்களாக அழியாத நினைவுகளாக பதிந்துபோனது.
   சொன்ன நிகழ்வுகள் குறைவு
   சொல்லாத நிகழ்வுகள் அதிகம்
     
 பாறைத்திருவிழாவின் நண்பர்கள் பதிவு பெயர் மீது கிளிக் செய்யவும்
  சித்திரைவீதிக்காரன்
   ராஜண்ணா
    ஷாஜஹான்
    பாடுவாசி

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்.இது போலான நிகழ்வுகள் நிறைய ஏனோ தவறிப்போகின்றன கலந்து கொள்ள முடியாமல்/

    பதிலளிநீக்கு