செவ்வாய், அக்டோபர் 23, 2012

வேதனைக்குரல்


தன் குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்ட அப்பாவை மழலை குரலில் சாக்லெட்வாங்கிவாப்பா என சொல்ல மகிழ்வோடு சரிப்பா என பைக்கில் புறப்பட்டான் குமரன்.

தொடர்மழையால் மண்பாதை நசநசத்து போய் பைக் ஓட்டுவது சிரமமாக இருந்தது, சிறிது தூரம் தான் அதன்பின் தார் ரோடு வந்துவிடும், தார்ரோடும் மழைகாரணமாக குண்டும் குழியுமாக இருப்பதும், தண்ணீர்தேங்கி இருப்பதால் டம்டம் என சப்ததுடன் ஒட்டவேண்டியுள்ளது,

சிறிது தூரம் சென்றவுடன் நான்கு வழிசாலை வர சர்வீஸ் ரோட்டில் இடதுபக்கம் திருப்பி வண்டியை வேகமெடுத்தான். கலெக்டர் அலுவலகம் வந்து வலதுபக்கம் திரும்பி நான்குவழி சாலை கடந்து ஊருக்குள் நுழையும் பாதையில் செல்லும் போது எதிரில் ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்தில் வெள்ளை  கோட்டை   ஒட்டியே வந்தது.  இடதுபக்கம்  இடம்  இருந்தும்  ஏன்
இப்படி  வண்டியை ஓட்டுகின்றனர் இவர்களை சைடுவாங்குவதும் சிரமம் என மனதுக்குள் திட்டிகொண்டே வரும் போது இரயில்வே கிராஸிங்யை கடந்து வேகமாக வந்த மணல் லாரி ஹாரன் அடித்துக்கொண்டே ஷேர்ஆட்டோவை முந்த ஷேர் ஆட்டோ அப்போதும் இடதுபக்கம் ஒதுங்காமல் மையபகுதியில் செல்ல அதையும் மீறி லாரி சைடுவாங்க எதிரில் ஒரமாய் வந்த குமரன் பைக்கோடு தூக்கி எறியப்பட்டான்.






அடிபட்டவன் நிலையை கண்டவுடன் லாரி டிரைவரும் கிளினரும் ஓடிவிட கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்க வேண்டிய ஷேர்ஆட்டோவோ அதில் பயணம் செய்தவர்களோ கவலைபடாமல் சென்றுவிட்டனர்.

சப்தம் கேட்டு சிறிது தூரத்தில் உள்ள டீ கடையில் இருப்பவர்கள் ஓடிவந்து 108 க்கு போன் செய்து ஆஸ்பத்தரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு தகவல் வந்தவுடன் நானும் நண்பர்களும் ஆஸ்பத்தரிக்கு வந்த போது ஐசியு வார்டு வாசலில் குமரன் மனைவி உறவினர்களோடு சோகமாக உட்கார்ந்திருக்க குமரனின் குழந்தை நடந்த சோகம் அறியாமல் விளையாடி கொண்டிருந்ததை நான் உட்பட அங்கு உள்ளவர்கள் சோகமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஐசியு கதவு திறக்கும்போதெல்லாம் வெளியே காத்து இருக்கும் உறவினர்களிடம் ஒருவித பயம் கலந்த பதட்டம்ஏற்படும்,அவர்அவர் தனக்கு பிடித்த கடவுள் அல்லது குலதெய்வத்தை நினைத்து பால்குடம் எடுக்கிறேன் மொட்டை போடுகிறேன் என வேண்டும் வேதனைக்குரல்
அங்குள்ளவர்களுக்கு கேட்கவே செய்தது,

அப்போது கதவு திறந்து வெளிவந்த டாக்டர் குமரன் என அழைக்கவும் அவர் மனைவியும் அவரது உறவினர்களும் டாக்டரை நோக்கி ஓடினர் சிறிது நொடியில் ஐயோ என அலறல் அங்கு எல்லோரையும் திடுக்கிடவைத்தது. மார்சுவரி அறைக்கு அழதுகொண்டே செல்லும் உறவினர்களுக்கு பின்னே குமரனின் குழந்தையை தூக்கிகொண்டே சென்றது மனம்வலித்தது,

குமரனின் நட்பை எண்ணிபார்த்த போது அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது, உடலை பெற்றுக்கொண்டு வேனில் செல்லும் போது விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது ஒரு ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்திலேயே சென்றதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.