செவ்வாய், பிப்ரவரி 26, 2013

பசுமை நடை பயணம் [கிரீன் வாக்]

 

                  கிரீன் வாக் 20 வரும் 24.2.13 காலை திருப்பரங்குன்றம் என அ.முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து sms தகவல் ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிட்டது. இந்தமுறை விருதுநகரில் இருந்துஅதிக நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என, வேலைபார்க்கும் நண்பர்கள், வெளிவட்டார நண்பர்கள் என பலரிடம் தகவல் கூற பலர் வருவதாக கூற எண்ணிக்கை 15 ஆனது. உடன் நண்பர் அ.முதுகிருஷ்ணன் அவர்களுககு இந்தமுறை 10 பேர் கலந்து கொள்வோம் என தகவல் கூறினேன்,ஆனால் 22ம் தேதி மாலை வருவதாக கூறிய நணபர்களுக்கு தகவல் கேட்ட போது அப்புறம் பார்க்கலாம் என கூற 15 எண்ணிக்கை என்னை சேர்த்து 4 ஆகி போனது,சிலர் போனை எடுக்கவே இல்லை,சரி இரண்டு பைக்கில் கிளம்புவோம் என முடிவு செய்தோம்.
          சனிகிழமை மாலை நண்பர் விமலன் நான் குடும்பத்துடன் 3பேர் கலந்து கொள்வதாக தகவல் கூறினார், அப்புறம் இரவு 7 மணிக்கு மேலும் இரண்டு பேர் குழந்தைகளுடன் வருவதாக போன் செய்ய எண்ணிக்கை 13 ஆனது.ஒரு கார் ,3பைக் என 24.2.13 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு புறப்பட்டோம்.
          அதிகாலை பனி காரணமாக பைக்கில் செல்வது கஷ்டமாக இருந்தது, திருப்பரங்குன்றம் அடைந்தபோது 6.40 மணி எங்களுக்கு முன்பே அ.முத்துகிருஷ்ணன் மற்றும் சில நண்பர்கள் அங்கு இருந்தனர்.[பேரா.சாத்தலிங்கம் ஐயா, பேரா.ரத்தினகுமார், பேரா.பெரியசாமிராஜா] வா நண்பா என அ.அர்ஷியா எங்களை வரவேற்றார்,மேலும் சிலர் வர சுமார் 80 பேர் மலைஏறினோம்

 

                     ஏற்கனவே ஒருமுறை இந்தமலையின் மேற்குபகுதியில் உள்ள சமணர்குகைக்கு பசுமைநடை சென்றுயிருந்தாலும், இநத முறை மலை உச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள சமணர் கல்வெட்டுகளை காண பயணம் ஆரம்பம்மானது. மலையேரும் வாசல் வரை வீடுகள் இருந்தன, அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை கடந்தவுடன் கானகம் செல்லும் பாதை ஆரம்பித்துவிடுகிறது, மழையில்லாததால் மரங்கள் இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. மலையின் பாதை செங்குத்தாக இருந்ததால் மூச்சு வாங்கியது உட்கார்ந்து உட்கார்ந்து தான் சென்றோம்.
             
                     இந்த பாதை மத ஒற்றுமை பாதை என்றும் கூறலாம் காரணம் மலை உச்சியில் ஒருபக்கம் காசிகோவில் இன்னொறுபக்கம் சிக்கந்தர் தர்கா என இருப்பதால் மலைபாதையில் முக்கால்வாசிதூரம் இந்துக்களும் முஸ்லீம்கலும் ஒன்றாகவே மலை ஏறுகின்றனர். மலையின் கிழக்கு பகுதியில் இருந்து இந்துகோவிலுக்கு சிமென்ட் படிக்கட்டுட்களுடன் பாதை அமைக்கபட்டு இருந்தாலும் அந்த பாதையில் யாரும் வருவதில்லை சிலநேரங்களில் அந்த பாதையில் வழிபறிநடைபெறுகிறது. எனவே இந்த வடக்குபாதையை தான் அதிகம் பயன் படுத்துகின்றனர்.
              சிறிது தூரம் ஏறியபின் பெரும் பாறையுடன் கூடிய திட்டுகாணப்படுகிறது. அங்கிருந்து அந்த நேரத்தில் மதுரை நகரின் மொத்த அழகையும் பார்ப்பது அழகு, ஆனந்தம் ஏற்படுத்தும் பரவசம்தான். குழந்தைகள் ஓடிபிடித்து விளையாடினர், ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் அந்த நேரத்தில் ஏற்பட்ட சந்திப்பின் பயன்படுத்திகொண்டனர், அந்த இடத்தில் தர்காவுக்கு தனிபாதை பிரிந்தது. சிறிது தூரம் நடந்தோம், மலையின் கிழக்கு பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையுடன் இணைகிறது. மலைஏற பாதுகாப்புடன் சுவர்கள் எழுப்பப்பட்டு படிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏறுவது கடினமாக இருந்தது.
          உச்சியில் ஒருமண்டபம் ஓய்வு எடுக்க பெஞ்சுகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து தென்பகுதிகளை பார்த்தால் அற்புதகாட்சி, கீழே தென்குன்ற குடைவறை கோவில் வாசலில் உள்ள பார்க் மற்றும் வீடுகள் கண்மாய்கள் (தண்ணீர் குறைவாக) மற்றும் நிலையூர் ஊர் அழகாக காட்சியளித்தது. பாதையில் செல்லும் லாரிகள், பஸ்கள்,பைக் போன்றவை விளையாட்டு மொம்மைகளாக காட்சியளித்தது. திருப்பரங்குன்ற இரயில் நிலையத்தில் இருந்து நெல்லைநோக்கி சென்ற இரயில் அப்போதுதான் புறப்பட்டுகொண்டு இருந்தது. மேலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்த்தபோது குழந்தையின் மனநிலைக்கு எங்களைமாற்றிவிட்டது.

 
         
              அங்கிருந்து சிறிது இறக்கம் வலதுபக்கம் பாதுகாப்புசுவர், இடதுபக்கம் மேலேரும் நீண்ட பாறை இடையில் தண்ணீர்சுனை விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்பாக இருந்தாலும் குரங்குகளால் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது வழிபறி திருடர்கள் போல் எங்களிடம் உள்ள பை, தண்ணீர்பாட்டிலை பிடிங்கிசென்றது, ஒரு குழந்தையிடம் தண்ணீர் பாட்டிலை பிடுங்க அது தரமறுக்க அங்கு ஒரு அலறல் போராட்டம் நடந்தது, நாங்கள் கம்பை எடுத்து விரட்டி சென்றாலும் பயம் அறியா குரங்காக இருந்தது.முடிவில் குரங்கு வெற்றிபெற்று பாட்டிலை பிடிங்கி சென்றது, சுவர் மீது உட்கார்ந்து பாட்டில் மூடியை திறக்க முயற்சித்து முடியாமல் கீழே போட்டுவிட்டது.
                  இன்னொறு குழந்தயிடம் கேன்பாக்கை பிடிங்கி ஜிப்பை திறந்து பிஸ்கட்பாக்கெட்டை எடுத்துகொண்டு பையை கீழே போட்டுவிட்டு நல்லவராய் நடந்துகொண்டது. இப்படி குரங்குகளின் தொல்லை அதிகம். கோவில் முன் இடதுபக்கம் சுனைக்கு மேல் செங்குத்தான உயரமான பாறை அதில் சமணமுனிவர்களின் இரண்டு அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்தகாலத்தில் கூட இந்த உயரத்தில் செதுக்குவது சிரமம் என எண்ணிபார்கையில் ஆச்சரியமாக இருந்தது.
        அதன் எதிரில் கலந்துகொண்டவர்கள் உட்கார போராசரியர். சாத்தலிங்கம் ஐயா அவர்கள் அந்த சிற்பங்களின் சிறப்பை அந்த பகுதி வரலாற்றை விளக்க மேலும் ஆச்சரிய தகவலாக இருந்தது, இன்று முருகன் கோவிலாக இருந்தாலும் திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் பாடல்களில் இது சிவன்கோவிலாக பாடல் பாடப்பட்டுள்ளதாக கூறி கோவில் அமைப்பை எடுத்துகூறினார்கள். இந்த மலைக்கு மேல் உள்ள சிக்கந்தர் தர்கா பற்றியும் கூறினார்கள், கோவில் பின்புறம் உள்ள இயற்கை குளம் மற்றும் அந்த இடத்தின் அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது, பார்த்து உணர்ந்தால்மட்டுமே முடியும்.
     
      அழகை உண்ட மயக்கத்தில் மலையின் கீழே இறங்கினோம். எஸ்.அர்ஷியா அவர்கள் தன் அப்பாஷ்பாய் தோப்பு நாவலில் சிக்கந்தர் தர்கா பற்றி குறிப்பிட்டு இருப்பார், அதைபடிப்பவர்கள் அங்கு இரவு தங்கி இருந்த உணர்வை பெறுவார்கள், தர்கா பற்றி உண்மை வரலாற்றை அறிய அடுத்தமுறை அங்கு ஓர் பசுமைநடை போடவேண்டும் என அ.முத்துகிருஷ்ணன் கூறினார்கள், பேசிக்கொண்டும் அங்கிருந்த படி மதுரை அழகை ரசித்துக்கொண்டும்,கீழே அடிவாரத்திற்கு வந்தோம்,
           நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தவர்கள் காலை உணவு வழங்க மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பசுமைநடையின் பசுமையான நிணைவுகளுடன் வீடு திரும்பினோம்


.

சனி, பிப்ரவரி 16, 2013

இலக்கியவாதிகள் சந்திப்பு 2


         கடந்த வாரம் அம்மாவை பார்க்க திருமங்கலம் சென்றேன். அப்படியே எழுத்தாளர் நண்பர் திரு.ஷாஜஹான் அவர்களை பார்க்கலாம் என போன் செய்தபோது என்ன வேல்முருகன் ஆளையே காணாம் வாருங்கள் வீட்டில் தான் உள்ளேன் என கூற அவரை பார்க்க சென்றேன். அவரை சந்தித்தபோது நான் வெகு நாட்களுக்கு முன்கேட்ட வண்ணநிலவன் எழுதிய ”கடல்புறத்திலே” நாவல் மற்றும் நான் கேட்காத ”கம்பா நதி” நாவலையும் சேர்த்து தந்தார், சென்னை புத்தககண்காட்சிகு சென்றபோது உங்களுக்கா வாங்கினேன் என்றார்.
          மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மற்றும் பல விஷயங்களை பற்றி பேசினோம். நண்பர் அர்ஷியா,மற்றும் முத்துகிருஷ்ணன் அவர்களை பார்தீர்களா என கேட்டார், மதுரை சென்று வெகு நாள் ஆகிவிட்டது என சொன்னேன்,, திருநகர் போவோம் என உடன் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு போன் போட்டார், அவர் வேறு நிகழ்வில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது எழுத்தாளர்.பெருமாள்முருகன் திருமங்கலம் வந்துள்ளதாக உடன் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு போனோம்.
          அதற்கு முன் இரண்டு விஷயங்களை கூற வேண்டும் நான் முதன் முதலில் சந்திக்க சென்ற அர்ஷியா மற்றும் கவிஞர்.சாம்ராஜ்(தனிதனியாக சந்தித்த நாளில்) அவர்கள் வீடுகளுக்கு போன போது முன்பின் அறிமுகம் ஆகாத நிலையிலும் வெகு நாள் பழகிய நண்பர்களை போல் பேசினார்கள் விடைபெற்று போகும் போது அவர்கள் பொகிஷமாக வைத்து இருந்த புத்தகங்களை படிக்க தந்தார்கள். நானே இப்படி தந்ததில்லை,ஆச்சரியமாக இருந்தது.

 
         அதேபோல் தான் ஷாஜஹான் அவர்களும், இவர் கவிஞர்,நாவலாசிரியர்,மொழிபெயர்ப்பாளர். என்விகடனில் ”எனது ஊர் திருமங்கலம்” என கட்டுரை எழுதியுள்ளார். வீடு முழுவதும் புத்தகம் புத்தகம் தான் இவர் நல்ல விமர்சகர் இவரை பற்றி எழுத்தாளர்களுக்கு தெரியும். இவரை மொழிபெயர்புக்கு பதிப்பகங்கள் பயன்படுத்திகொண்டால் பல அறிய நூல்கள் தமிழுக்கு கிடைக்கும்.
           பெருமாள்முருகன் இருவரையும் வரவேற்றார். நான் அவரை இப்போது தான் சந்திக்கின்றேன்.இருவரும் தமிழ் இலக்கிய போக்கு பற்றியும், பதிப்பகங்கள் பற்றியும் பேசினார்கள், நான் பார்வையாளனாக அமர்ந்து கேட்டுகொண்டு இருந்தேன்,இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை, அன்றைய நாள் மறக்கமுடியாத நாளாக என் மனதில் பதிந்துபோனது.

செவ்வாய், ஜனவரி 29, 2013

'தவம் கலையும் காலம்' ஆய்வுநூல்


       நண்பரும், பேராசிரியரும்மான முனைவர்.த.கண்ணா கருப்பையா அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுநூல் 'தவம் கலையும் காலம்' இன்றைய தமிழ் பேராசிரியர்கள் பலர் இன்றைய இலக்கியங்களில் கவனம் செலுத்தாத நிலையில், இன்றைய இலக்கியவாதிகள் நூல்களையும், ஏற்கனவே இலக்கிய உலகில் வளம் வந்து பிறரால் மறக்கப்பட்ட இலக்கியவாதிகள் பற்றியும் படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

               எஸ்.அர்ஷியாவின் "பொய்கைக்கரைப்பட்டி" நாவல், பாண்டியகண்ணனின்  'சலவான்' நாவல் ( விருதுநகரில் நடந்த உண்மை சம்பவம், மறைக்கப்பட்ட நிகழ்வுகள் நாவலாக்கப்பட்டுள்ளது), கீரனூர் ஜாகீர்ராஜாவின் மீன்குகை வாசிகள் மற்றும் வடக்கே முறி அலிமா நாவல்கள் பற்றியும், அரவாணிகளின் உண்மை முகத்தை காட்டும் அவன்- அவள்- அது, " மூன்றாம் பாலின் முகம்" நாவல்கள் பற்றியும் நாம் படித்து இருந்தாலும், அதில் உள்ள அதில் உள்ள கருத்தின் ஆழத்தை கட்டுரை மூலம் நமக்கு உணர்த்தி மீண்டும் அந்த நாவல்களை வாசிக்க தூண்டும் நிலையை ஏற்படுத்துகிறார்.
       
        குயிலன் பற்றியும், ரா.சிதம்பரம் அவர்களை பற்றிய கட்டுரைகள் படிக்கும் போது மறக்கப்பட்ட. மறைக்கப்பட்ட இரண்டு உன்னத இலக்கியவாதிகளை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. ரா.சிதம்பரத்தின் சிறுகதைகள் இப்போது கிடைக்குமா என தெரியவில்லை. நாவல்கள் திரைப்படமாக்கப்பட்ட பட்டியலும், அவைகள் படமாக்கப்பட்டபோது நடத்த நிகழ்வுகளையும் கட்டுரைகள் படிக்கும் போது அறிந்து கொள்ளமுடிகிறது.
\          ஆய்வுகட்டுரைகள் கல்லூரிகளில் சமர்க்கிப்படும் போது நடக்கும் நிகழ்வுகளை ஆழமாகவும், கவலையுடனும் சுட்டிகாட்டியுள்ளார். கல்லூரிமாணவர்கள் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர்களும் படிக்கவேண்டிய நூல். தொடர்ந்து நல்லபடைப்பாளர்களை இனம் கண்டு மாணவர் சமுதாயத்துக்கு எடுத்துசொல்வதுடன் அவர்களின் செயல்பாடுகளை இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் அறிந்து கொள்ள இது போன்ற நூல்கள் தங்களிடம் இருந்து வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நூல் வெளியீட்டு விழா 26.1.13 மாலை மதுரையில் வடக்குமாசி வீதியில் மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பானதொரு நிகழ்வாக இருந்தது. .ஐந்துபேர் நூலை வாழ்த்தியும், ஐந்துபேர்கள் நூலைபற்றிய விமர்சனம் செய்தும் நடைபெற்ற கூட்டம் அருமையாக இருந்தது. எழுத்தாளர்கள் எஸ்.அர்ஷியாவும், பாண்டியகண்ணன் அவர்களை அழைத்து பேசசெய்து சிறப்பு செய்ததும், குயிலன் மற்றும் ரா.சிதம்பரம் அவர்களின் குடுபத்தினர்களை அழைத்து சிறப்பு செய்ததும் பாராட்டுதலுக்குரியது.

சனி, ஜனவரி 19, 2013

சதுரகிரி மலை பயணம் பாகம் 1

அருள்மிகு சுந்தரமகாலிங்கம்

       மார்கழி அம்மாவாசை அன்று மகாலிங்கம் கோவிலுக்கு போகிறேன் என நண்பர்        கூற         நானும் வருகிறேன் எனகூறினேன்.
  10. 1. 13 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு விருதுநகரில் இருந்து எனது
பைக்கில் புறப்பட்டு 51 கி.மீ பயணம் செய்து சதுரகிரி மலையின் அடிவாரம்,
தாணிப்பாறைக்கு இரவு 9.30க்கு வந்தோம்.
          அந்த நேரத்திலும் அங்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர், ஆடி
அம்மாவாசையெனில் அந்த இடத்தில் நிற்க இடமில்லாத அளவு பக்தர்கள் கூட்டம்இருக்கும்,   ஆனால்   இன்று   ஐம்பதுபேருக்கும்       குறைவானவர்களே அங்கு இருந்தனர். அடிவாரத்தில் டார்ச்லைட் இருபது ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்தனர்,
 7மலைகடந்து    ( 11 கி.மீட்டர் )      சுந்தரமகாலிங்கம் அடைய குறைந்தது 3மணி நேரமாகும்    அதுவரை இருட்டில் தான் நடக்க வேண்டும், என்பதால் வீட்டில் இருந்து டார்ச்    கொண்டு வந்து விட்டோம்.
  மார்கழி மாதம் பனிவிழும் நேரம் அம்மாவாசை இருட்டு நாங்கள் இருவர்
மட்டுமே மலை ஏறினோம், பத்து நிமிடத்திற்கு முன் 4 பேர் சென்றுள்ளனர்
வேகமாக சென்றால் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் என ஒரு சாது கூறினார்.
      டார்ச் வெளிச்சத்தில் மலை பாதயில் நடந்தோம், சிறிது தூரம் சாதாரண
பாதையாக இருந்தது பத்து நிமிட நடைக்கு பின் வனக்காளி கோவில் வந்தது
அருமையான இடம் இயற்கையை ரசிக்க வேண்டிய இடம்
அந்த கோவிலில் இரவு 10மணிக்கு அன்னதானம்  வழங்கிகொண்டிருந்தனர், சுட,சுட, ரசம் சாதம் பொறியலுடன் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

             நான் குளிராக இருக்கும் என ஸ்வட்டர் அதன்மேல் சட்டை அணிந்து
இருந்தேன், நண்பரோ மேல் சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் புறப்பட்டார்,
குளிரபோகுது என்றேன் அவர் சிரித்துக்கொண்டே மலையில் ஏற ஏற வியர்க்கும்
என்றார், அந்த இடத்தில் இருந்த கடினமான பாதை ஆரம்பித்து விடுகிறது,
வழுக்குபாறை, செங்குத்துபாறை என டார்ச் லைட் வெளிச்சத்தில் கடந்தோம் மலைஏறும்  போது எனக்கு மூச்சு வாங்கியது அப்போது உட்காரபோவேன் நண்பர்   உட்கார விடமாட்டார் பாறையில் சாய்ந்து நில்லுங்கள்,    மூச்சுவாங்குவது     சரியானபின் நடப்போப் உட்கார்ந்தால் பின் நடக்கும் போது கால்வலிக்கும்என்பார், பத்துநிமிடம் நடப்பது இரண்டுநிமிடம் ஓய்வு என பயணம் தொடர்ந்தது,

       ஒரு மணி நேர நடையில் என் ஸ்வட்டர், சட்டை வியர்வையால் நனைந்து விட்டது,நானும் மேல் சட்டையை கழட்டிவிட்டேன்.
  அடுத்த ஒரு மணிநேர பயணம் மிக கடினமாக இருந்தது. வானில் நட்சத்திரங்கள்  கூட தெரியாத அளவு மரங்கள் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது,     சிலஇடங்களில் இடது பக்கம் பெரியபள்ளம் காணப்படுகிறது விழுந்தால் பிழைப்பது கடினம் ஜாக்கிரதையாக நடக்கவும் என நண்பர் கூறிக்கொண்டே வருவார், ஐந்து வருடமாக மாதம்மாதம் அம்மாவாசைக்கு வருகிறார் ஒன்னரை மணிநேரத்தில் செருப்புபோடாமல் கோவிலுக்கு சென்றுவிடுவார் எனக்கா அவரும் மெதுவாக நடந்துவந்தார்.

     இரண்டு மணிநேரத்திற்கு பின் பெரிய பசுகிடை பகுதிக்கு வந்தடைந்தோம்,  இயற்கையாகவே பெரிய பாறைகளால் ஆன சமவெளி நூறு பேர் கூட
படுத்துக்கொள்ளலாம், காட்டில் மாடு மேய்பவர்கள் மாடுகளுடன் ஓய்வு
எடுக்கும் பகுதி என்பதால்  பெரிய பசுகிடை என பெயராம், இடமும் அருமை
காலைநீட்டி படுத்தேன் உடம்பில் வடியும் வேர்வை மீது
மார்கழிபனி உடம்பில் படும் போது உடலில் ஜஸ் வைத்து ஒத்தடம் தருவது போன்ற ஆனந்தம்,  டார்ச் லைட்டை அணைத்து விட்டு அந்த இருளில் யாருமில்லா கானகத்தில்படுத்துகொண்டே வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்ப்பது ஆனந்தம் ஆனந்தமே,பக்கத்தில் இருப்பவர் கூட தெரியாத அளவு இருள், கானகத்தில் எழும் சப்தம் கூட இல்லை,ஆனால் மனதில் கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை  எல்லாம் சுந்தரமகாலிங்கம் அருள்தான்.

     பத்துநிமிட ஓய்வுக்கு பின் புறப்பட்டோம் அரைமணி நேரம் பயணம் சின்ன
நாவல் ஊற்று
8.6.2013 அன்று சுந்தரமகாலிங்கம் மலை சென்றபோது வறண்டு காணப்பட்ட நாவல் ஊற்று
பசுமடை வந்தது அங்கு'நாவல்ஊற்று' உள்ளது தண்ணீர் கலங்கலாக இருந்தாலும்சுவையோடு இருந்தது. இந்த நீரை குடித்தால் சக்கரைநோய் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.  3மணி நேர பயணத்திற்க்கு பின் இரவு 12.30 க்கு         மகாலிங்கம் சன்னதியைஅடைந்தோம். கோவிலும் சுற்றியுள்ள பகுதியும் இருட்டாக இருந்தது.ஜெனரேட்டர் மூலமே அங்கு மின்சாரவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அருள்மிகு.சுந்தரமகாலிங்கம் சன்னதி

         அதனால் காலை 5 மணிக்கு முதல் பூஜை ஆரம்பிக்கும் போது தான் ஜெனரேட்டர் போடுவார்கள்.நாங்கள் சன்னதி வாசலில் படுத்தோம், குளிரின் கடுமையை அப்போதுதான்   உணர்ந்தேன், கொண்டுபோன துண்டு போர்வையாக பொத்திபடுத்தாலும்    குளிர்தாங்கமுடியவில்லை, ஆனால் நடந்தவந்த களைப்பு தூக்கத்தை   ஏற்படுத்தியது.
     காலை 3.30 இருக்கும் நண்பர் எழுப்பிவிட்டார், மகாலிங்கம் கோவிலுக்கும்
மேல் சந்தனமகாலிங்கம் சன்னதியில் பூசை ஆரம்பித்துவிட்ட மணி ஓசை கேட்க  அங்கு போவாம் என அழைத்து சென்றார், மரத்துபோன கால்கள் எட்டுவைக்க    சிரமப்பட்டாலும் அங்கு சென்று பூசையை பார்த்தோம், அந்த குளிர்நேரத்திலும் பலர் கலந்து கொண்டனர், சக்கரைபொங்கள் பிரசாதம் தந்தனர் சுவையாக இருந்தது.
    அதன் பின் சுந்தரமகாலிங்கம் சன்னதி வந்தோம் அங்கும் பக்தர்கள் தந்த
இளநீர்,விபூதி,மஞ்சல், பஞ்சாமிருதம் பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து  அதன் பின் மலர்அலங்காரம் செய்து பூசை நடந்தது .   ஆனந்தமான தரிசனம் ஒருமணிநேரம் நடந்தது.அபிஷேக விபூதி அனைவருக்கும் வழங்கினார்கள்.
 காலை6 மணிக்கு பூசை முடிந்தவுடன் அந்த பகுதியில் அன்னதானம் ஆரம்பமாய்     விடுகிறது,  இரவு வரை அன்னதானம் நடைபெறுமாம்.காலை சுடசுட உப்புமா சாப்பிட்டுவிட்டு,  காலை 7மணிக்கு கீழே இறங்க ஆரம்பித்தோம்,
       இரவு ஆள்நடமாட்டம் இல்லாதபாதையில் சாரைசாரையாக பக்தர்கள் கூட்டம் மலை ஏறிகொண்டிருந்தனர்.
ஏறும்போது மூச்சு இறைத்தது எனில் கீழே இறங்கும் போது கால் அதிக வேதனை  தந்தது, ஏறுவதை விட மலை  இறங்குவது கடினமாக இருந்தது, இறங்கும் போது, பாறையிடுக்கில் கால் மாட்டிகொள்ளாமல் இறங்கவேண்டும். ஏறுபவர்கள் வழிவிடாவிட்டால் சிரமம்தான் காரணம் சில இடங்கள் பாதை குறுகி உள்ளது.
பயணகட்டுரையாளர்
மலையின் மொத்த அழகையும் ரசித்தபடி அடிவாரத்தை அடைய காலை9.30மணி. அதற்கு முன் வழியில் பல இடங்களில் சுக்குமல்லி காபி வழக்கினர், ஒரு இடத்தில் மலைகிழங்கு மூலிகை டீ போட்டு விற்பனை செய்கின்றனர், வாங்கி குடித்தோம் அருமையான சுவை களைப்பு போன இடம் தெரியவில்லை.
 அடிவார பாதை முழுவதும் காவிஉடை பிச்சைகாரர்கள். சிலர் அவர்களிடம்
பிச்சைபோட்டு விபூதி பூசிக்கொண்டனர். அடிவாரத்தில் சப்பாத்தி, பொங்கல்
அன்னதானம் நடைபெற்றது. பொங்கல் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம். அரசுபேருந்து வசதிகள் அதிகமாகவே உள்ளது.{விழா காலங்களில்}
மறக்கமுடியாத அனுபவம். 
          பயணம் மீண்டும் தொடரும் ...








திங்கள், ஜனவரி 14, 2013

ஒற்றைநட்சத்திரம்

ஒற்றைநட்சத்திரம் அணுஉலையால் ஆபத்து என்று எந்த மாநிலமும் இடம் தராத நிலையில் தமிழ்நாட்டில் தான் தமிழ் உணர்வு பேசிக்கொண்டு என இருபிரிவுகளாய் நிற்பதை அறிந்து இடிந்த கரையில் இடம் வாங்கி அணுஉலையை நிறுவி விட்டனர் இருபது ஆண்டுகளாய் ஆனாலும் மின்சாரம் இதுவரை உற்பத்தியாகவில்லை அணு உலை ஆபத்தை அரசியல் கட்சிகள் தெரிந்து இருந்தும் வாய்மூடி மெளனமாய் நின்ற போதும் ஒற்றை ஆளாய் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை உணர்த்திட்டாய் இன்று, அந்த பகுதி மக்களுக்கு சுப.உதயகுமார் என்பவர் மட்டுமே நம் வாழ்வியலை காப்பாற்ற போராடும் வீரனாய் தெரிகின்றாய் அதனால் நீ எங்களுக்கு இருண்ட அரசியல் வானில் ஒற்றைநட்சத்திரமாய் தெரிகின்றாய்...

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

காலத்தின் குரல்


இன்று நூலகத்தில் இருந்து "காலத்தின் குரல்" கவிஞர்மீராவின்முதலாம்
ஆண்டுநினைவஞ்சலி நாளில் வெளியான நூலைபடித்தேன்.

        தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள் அவருடன் பழகிய நினைவுகளை பதிவு செய்திருந்தார்கள். நூலை படிக்கபடிக்க மீரா அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும்வாய்ப்பைபக்கத்தில்இருந்தும்தவறவிடப்பட்டுள்ளேன்.

      அவரின் அன்னம் விடு தூது இதழ் வெளிவந்த போது வாங்கிபடிப்பேன், மற்றவர்கள் குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி வாங்கிபடிக்கும் போது நான் செம்மலர், அன்னம் விடுதூது வாங்கி எப்போதும் கையில் வைத்து திரிவேன்.

   அப்போது இப்போது உள்ள குமுதம் இதழ் அளவில் 2 புத்தகம் வெளிவந்தது. அப்போது மதுரையில் போக்குவரத்துக்கழகத்தில் அப்பிரண்டிஸ் பார்த்த நேரம்.

அச்சமயம் கரிசல்காட்டு கதை வெளியிட்டார்கள்வாங்கி படித்தேன் வியந்தேன்  அதன்பின்தான் கி.ராஜ்நாராயணன் எல்லோரும் அறியும் நிலை ஏற்பட்டது என எண்ணுகிறேன்.

          அப்பிரண்டிஸ்முடிந்து சிவகங்கையில் 1986 ல் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்தேன். தினசரி மதுரையில் இருந்து சிவகங்கை சென்றுவருவேன். காலை 6.20க்கு சிவகங்கை பஸ்,  பலநாட்களில் அந்த நேரத்தில் எங்களுடன் மீரா அவர்களும் சிவகங்கை பயணம் செய்வார் கையில் பிரிப்கேஷ் சூட்கேஷ் வைத்து இருப்பார் சிலநேரம் இடம் கிடைக்காதபோது நான் எழுந்து இடம் தந்துள்ளேன். அப்போது புன்னகைமட்டுமே செய்வார்,

அவரது அகரம் அச்சகத்திற்கு 2முறை சென்றுள்ளேன்.நீளமான வெரன்டாவில் அவர்கள் வெளியிட்டநூல்களை பார்வைக்கு விற்பனைக்காக வைத்திருப்பார்கள், எனது கூச்ச சுபாவத்தால் மீராவை தள்ளி இருந்தே பார்த்துவியந்துள்ளைன்.

3 வருடத்தில் பணி இடம்மாறியதால் என் தடம்மாறிவிட்டது. இந்த நூலை படித்தபோது அவரின் நினைவு என்மனதில் வந்து சென்றது. அவசியம் அடுத்தமுறை காலத்தின் குரல் சொந்தமாகவாங்கவேண்டும்.  அவரின் கவிதைஒன்று

 " என்எழுதுகோல்வெறும்எழுதுகோல்அல்ல!
   தேசம்தழுவும்பொதுவுடமைக்கு
   வரவேற்புரை எழுதும் பொதும்
   தேகம் தழுவும்
    உனக்கு என் தனியுடமைக்கு
   வாழ்த்துரை எழுதும் போதும்
    என் எழுது கோல் வெறும் எழுதுகோல் அல்ல
  
   .

செவ்வாய், அக்டோபர் 23, 2012

வேதனைக்குரல்


தன் குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்ட அப்பாவை மழலை குரலில் சாக்லெட்வாங்கிவாப்பா என சொல்ல மகிழ்வோடு சரிப்பா என பைக்கில் புறப்பட்டான் குமரன்.

தொடர்மழையால் மண்பாதை நசநசத்து போய் பைக் ஓட்டுவது சிரமமாக இருந்தது, சிறிது தூரம் தான் அதன்பின் தார் ரோடு வந்துவிடும், தார்ரோடும் மழைகாரணமாக குண்டும் குழியுமாக இருப்பதும், தண்ணீர்தேங்கி இருப்பதால் டம்டம் என சப்ததுடன் ஒட்டவேண்டியுள்ளது,

சிறிது தூரம் சென்றவுடன் நான்கு வழிசாலை வர சர்வீஸ் ரோட்டில் இடதுபக்கம் திருப்பி வண்டியை வேகமெடுத்தான். கலெக்டர் அலுவலகம் வந்து வலதுபக்கம் திரும்பி நான்குவழி சாலை கடந்து ஊருக்குள் நுழையும் பாதையில் செல்லும் போது எதிரில் ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்தில் வெள்ளை  கோட்டை   ஒட்டியே வந்தது.  இடதுபக்கம்  இடம்  இருந்தும்  ஏன்
இப்படி  வண்டியை ஓட்டுகின்றனர் இவர்களை சைடுவாங்குவதும் சிரமம் என மனதுக்குள் திட்டிகொண்டே வரும் போது இரயில்வே கிராஸிங்யை கடந்து வேகமாக வந்த மணல் லாரி ஹாரன் அடித்துக்கொண்டே ஷேர்ஆட்டோவை முந்த ஷேர் ஆட்டோ அப்போதும் இடதுபக்கம் ஒதுங்காமல் மையபகுதியில் செல்ல அதையும் மீறி லாரி சைடுவாங்க எதிரில் ஒரமாய் வந்த குமரன் பைக்கோடு தூக்கி எறியப்பட்டான்.






அடிபட்டவன் நிலையை கண்டவுடன் லாரி டிரைவரும் கிளினரும் ஓடிவிட கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்க வேண்டிய ஷேர்ஆட்டோவோ அதில் பயணம் செய்தவர்களோ கவலைபடாமல் சென்றுவிட்டனர்.

சப்தம் கேட்டு சிறிது தூரத்தில் உள்ள டீ கடையில் இருப்பவர்கள் ஓடிவந்து 108 க்கு போன் செய்து ஆஸ்பத்தரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு தகவல் வந்தவுடன் நானும் நண்பர்களும் ஆஸ்பத்தரிக்கு வந்த போது ஐசியு வார்டு வாசலில் குமரன் மனைவி உறவினர்களோடு சோகமாக உட்கார்ந்திருக்க குமரனின் குழந்தை நடந்த சோகம் அறியாமல் விளையாடி கொண்டிருந்ததை நான் உட்பட அங்கு உள்ளவர்கள் சோகமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஐசியு கதவு திறக்கும்போதெல்லாம் வெளியே காத்து இருக்கும் உறவினர்களிடம் ஒருவித பயம் கலந்த பதட்டம்ஏற்படும்,அவர்அவர் தனக்கு பிடித்த கடவுள் அல்லது குலதெய்வத்தை நினைத்து பால்குடம் எடுக்கிறேன் மொட்டை போடுகிறேன் என வேண்டும் வேதனைக்குரல்
அங்குள்ளவர்களுக்கு கேட்கவே செய்தது,

அப்போது கதவு திறந்து வெளிவந்த டாக்டர் குமரன் என அழைக்கவும் அவர் மனைவியும் அவரது உறவினர்களும் டாக்டரை நோக்கி ஓடினர் சிறிது நொடியில் ஐயோ என அலறல் அங்கு எல்லோரையும் திடுக்கிடவைத்தது. மார்சுவரி அறைக்கு அழதுகொண்டே செல்லும் உறவினர்களுக்கு பின்னே குமரனின் குழந்தையை தூக்கிகொண்டே சென்றது மனம்வலித்தது,

குமரனின் நட்பை எண்ணிபார்த்த போது அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது, உடலை பெற்றுக்கொண்டு வேனில் செல்லும் போது விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது ஒரு ஷேர்ஆட்டோ ரோட்டின் மையத்திலேயே சென்றதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

என் இலக்கிய நண்பர்கள்,,,,,,,


நான் படிக்கும் கட்டுரைகள் ,கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் எழுதியவருக்கு கடிதம் எழுதிப் போடுவதுதான் என வழக்கம். 

தொலைபேசியில் பேசலாம்,நாம் பேசும் போது படைப்பாளி நம் பேச்சைக்கேட்கும் நிலையில் இருக்க வேண்டும்.அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது தெரியததால் நம் எண்ணங்களை அவருடன் பகிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பதால் அவரது விலாசத்திற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்வேன். 

பல நேரங்களில் படைப்பாளிகளிடமிருந்து கடிதம் வராது,நான் தொலை பேசி எண்னை குறிப்பிட்டு இருப்பேன்.பதிலும் வராமல் போய்விடும்.ஆனால் சிலரிடமிருந்து போன் வரும்.அப்போது மனதில் மகிழ்வு தோன்றும்.அத்துடன் இந்த அந்த போன் பேச்சுடன் சில படைப்பாளிகளின் தொடர்பு விட்டு விடும். 

ஆனால் அந்த தொடர்பு சிலரிடம் நட்பாக மலர்ந்து இணை பிரியா நட்பாகக்கூட மாறியுள்ளனர்.அப்படிபட்ட படிப்பாளிகளான இலக்கிய நண்பர்கள் சிலர் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். 

ர,சு நல்லபெருமாள்; இப்போது உள்ளவர்களுக்கு இவர்களைத் தெரியுமா என்பது தெரியாது.1970முதல்1985 வரை ஆனந்த விகடன் ,கல்கியில் பிரபலமான தொடர்கதைகள் எழுதிய நாவலாசிரியர்.அகிலன்,நா.பா போன்றவர்கள் எழுதும் போது அவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர். 

நான் சிறுவயதில் பள்ளி விடுமுறை தினங்களில் எனது பெரியம்மா வீடு போகும் போது வார இதழ்களில் வந்த கதைகளைத் தொகுத்து பைண்டிங்க செய்து வைத்திருப்பார்கள். 

அப்படி முதலில் நான்படித்த கதை “பொன்னியின் செல்வன” நாவல்.அதன் பின் அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன்” என வரலாற்று புதினங்கள் படித்து வந்த நிலையில் “திருடர்கள்” எனும் நாவலை படிக்கும் போது என்னுள் பிரமிப்பைத் தந்தது. 

அப்போது எழுத்தாளர் யார் என பார்த்த போது ர.சுநல்லபெருமாள் என இருந்தது.அதன் பின் அவரது கதைகளை படிக்க எண்ணி நூலகத்தில் தேடிய போது “கல்லுக்குள் ஈரம்” படித்தேன், 

இப்படி படிக்கும் போது அவர் பாளையம் கோட்டையில் இருப்பதாக தெரிந்தது.எனவே ஒரு போஸ்ட் கார்டில் ர.சு நல்ல பெருமாள் எழுத்தாளர்,பாளையம் கோட்டை என மட்டும் விலாசம் எழுதி கடிதம் போட்டேன்.அப்போது எனக்கு வயது17,18 இருக்கும். 

1980 இல்.ஒரு வாரம் கழித்து அவரிடமிருந்து கடிதம் வந்தது.அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு அது எந்த பதிப்பக வெளியீடு என குறிப்பிட்டும் கடிதமெழுதிமைக்கு நன்றி தெரிவித்தும் கார்டு போட்டிருந்தார். 

எனக்கு மகிழ்ச்சி வெள்ளம்,யாரிடம் பேசினாலும் “கல்கியில் கதை எழுதுபவரிடமிருந்து  கடிதம் வந்துள்ளது” என  பெருமையாகக் காட்டுவேன்,
ஆனால் மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅதை. 

அதன்பின்படிப்பு,வேலைதேடுதல்,திருமணம் எனஎன் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது. 

இடையில் கண்மணி குணசேகரன் மூலம் நெல்லையில் SETC யில் வேலை பார்க்கும் இசக்கி என்கிற நண்பர் அறிமுகமானார். 

இருவரும் இலக்கியம் பற்றி பேசும் போது எழுத்தாளர் ர.சு நல்ல பெருமாள் அவர்களைப் பற்றியும்,சிறுவயதில் அவர்களுக்கு நான் கடிதம் எழுதி பதில் வந்துள்ளது என்றேன்.அவர் “ஆம்,நான் ஒரு தடவை நண்பரைப்பார்க்க பாளையங்கோட்டைபோயிருந்தபோதுரசுநல்ல பெருமாள் எழுத்தாளர்,வக்கீல் என போர்டு மாட்டிய வீட்டைப்பார்த்துள்ளேன்” என்றார்.அவரை முடிந்தால் சந்திக்கவும் எனக்கூறினேன். 

ஒரு மாதம் கடந்து இருக்கும்,நண்பர் இசக்கி அவர் வீடு சென்று என்னைப்பற்றி கூறியுள்ளார்.உடனே என்னுடன் பேச விரும்பி அவரது செல் பேசி மூலம் பேசினார்.

கடிதம்வந்துமுப்பதுஆண்டுகளுக்குப்பிறகுஎன்மனம்கவர்ந்தஎழுத்தாளரிடமிருந்துபோன்.10 நிமிடம் பேசினார்.பல விசயங்களை பேசினார்.மிக்க மகிழ்வான நாளும்,மறக்க இயலாத நாளுமாய் அது என்னுள் பதிவகியது. 

அதன்பின்பத்துநாட்கள்கழித்துமீண்டும்நண்பர்இசக்கியிடமிருந்து போன்,
அதிர்ச்சியான தகவல்,ர,சு நல்ல பெருமாள் இறந்து விட்டார் என/நேரில் சந்தித்து பேசும் முன்பாகவே இறந்து விட்டார். 

அ.முத்துக்கிருஷ்ணன்; உயிர்மை இதழ் கட்டுரைகள் மூலம் எனக்கு தொடர்பு ஏற்பட்டு க்ரீன் வாக் அமைப்பு மூலம் மேலும் நெருக்கமான தொடர்பு ஆனதால் இன்று நண்பரானார்.
 


மாதம்ஒரு முறை மதுரையில் சந்திக்கும் நண்பரானார். இவர் மூலம் பல படிப்பாளிகளின் அறிமுகம் கிடைத்தது.மாதம் ஒரு முறை மதுரையில் நேரில் சந்திக்கும் நண்பர் அவ்வப்போது தொலைபேசியிலும் பேசிக்கொள்ளும் நண்பர்.பேச்சைப்போலவே அவரது கட்டுரைகளும்ஆவேசம்கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியது. 

எஸ்,அர்ஷியா; “உங்கள் நூலகம்” மாத இதழில் நீலகண்டப்பறவையை தேடி என்ற கட்டுரையை படித்தேன்.அதன் மூலம் ஏழரை பங்காளி நாவலைப்படித்தேன்.அந்த நாவலின் கதைப்பகுதி இஸ்மாயில்புரம். 

அந்தப்பகுதியில் எனது நண்பர் கதிரவன் இருந்தார்.அங்குதான் எனது இளமைப்பருவம் பல நாட்கள் கழிந்தது என்றாலும் அந்தப்பகுதியின் கதையை ,இஸ்மாயில்புரம் தோன்றிய வரலாற்றை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.உசேன் பாதிரப்படைப்பு என்னை வெகுவாக பாதித்தது.உடன் அவருக்கு கடிதம் எழுதினேன்.உடன் அவரிடமிருந்து போன் வந்தது.பலவிசயகளை பகிர்ந்து கொண்டோம்.மதுரை வந்தால் சந்திப்போம் என்றார்.
மதுரை NCBH புத்தகக்கடையில் ஒரு நாள் சந்தித்தேன்.முதல் சந்திப்பே மறக்க முடியாத மகிழ்வான சந்திப்பு.அந்த சந்திப்பின் நினைவாக NCBHல் இரண்டு புத்தகங்கள் ரூ 400க்கு வாங்கி அன்பளிப்பாகத் தந்தார் எனக்கு
நன்றிகூறவார்த்தைகள்இல்லாமல்செய்து விட்டார். 

இலக்கியம் மட்டுமல்லாது குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நண்பராகி விட்டார்.என் இலக்கிய உலகின் முதன்மையான நண்பர்.

அவரது மூன்றாவது நாவல் அப்பாஸ் தோப்பு புத்தகமாக வரும் முன் படித்துப்பார்க்கும் நண்பர்களில் ஒருவராக என்னை மாற்றியுள்ளார்.இவர் மூலமும் நல்ல இலக்கிய வாதிகள் அறிமுகம் கிடைத்தது.தரமான இலக்கிய படிப்புகள்தரும்இவர்இலக்கியஉலகில் பேசப்பட வேண்டிய எழுத்தாளர்.காலம் பதில் தருமா? 

கண்மணி குணசேகரன்;அ.முத்துக்கிருஷ்ணன் என்னோடு பேசும் போது தங்கள் போக்குவரத்துக் கழகத்தை மையப்படுத்தி வந்துள்ள நெடுஞ்சாலை நாவலைப் படித்தீர்களா என்றார். உடன்  வாங்கிப்படித்தேன்.  போக்குவரத்தின்
மெக்கானிக்,நடத்துனர்ஓட்டுனர்,பற்றிய கதை.அருமையான பதிவு. 

அவரைதொடர்புகொண்டுபேசியபோதுஅவரும்என்னைபோலபோக்குவரத்துக்
கழத்தில் மெக்கானிக் என அறிந்த போது மேலும் நெருங்கி இன்று உடன் பிறவா தம்பி ஆகிப்போனார்.(வயது வித்தியாசம் காரணமாக)இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை என்னிடம் பகிர்ந்து கொள்வார். 

அவர் எழுதிய அஞ்சலை நாவல் படிப்பவர்கள் நிச்சயமாக கண்மணி பற்றி தெரிந்து கொள்வார்கள்.கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அவரது படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் சென்று வந்தேன்.மறக்க முடியாத அனுபவங்களை தந்த நிகழ்வாய் அது. 

விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா,நாஞ்சில் நாடன்,சு,வேணுகோபால் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் இலக்கிய உலகில்பேசப்படும் எழுத்தாளராக வலம் வருவார்.அவரின் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு மகிழ்வைத் தரும். 

விமலன்;விருதுநகர்  அருகிலுள்ள  பெரியபேராலி  கிராமத்தை  சேர்ந்தவர்.
சிறுகதை  எழுத்தாளர்,  புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகரில்
எஸ்ஏபெருமாள்  அவர்களின்  கூட்டம்  நடைபெற்றது.  அங்குதான் சந்தித்துப்
பேசினோம். 

“நான்மூர்த்திஅரசுத்துறையில் எனதுபணிஎனகைகுலுக்கினார்.நான் பேசுவதை அதிகம்கேட்டார்,அவர் குறைவாக பேசினார்.ஆனால் நண்பர் பாண்டியக் கண்ணன்தான் இவர் விமலன்  என்கிற  பெயரில் மூன்று  சிறுகதை தொகுப்பு
களை போட்டுள்ளார்.என்றார். 

அடுத்த சந்திப்பில் அவரது சிறுகதை தொகுப்பு இரண்டு புத்தகம் தந்தார்.ஒன்று “காக்காசோறு,மற்றொன்று“வேர்களற்று”/ 

இரண்டு நூலும் சிறுகதைதொகுப்பு.எளிமையான கதைகளாக வாழ்க்கையை உணர்த்தும் கதைகள். 

எனக்கு நெடுஞ்சாலை என்ற பெயரில் வலைத்தளம் ஏற்படுத்தித் தந்து என்னை எழுததூண்டிய நண்பர்.இன்று என் எண்ணப்பதிவுகள் எழுத்துக்களாக மாறியுள்ளதற்கு காரணமானவர். 

தினசரிபோனில்பேசும்நண்பர்இவர்சிட்டுக்குருவிஎன்ற பெயரில் வலைத்தளம் ஒன்றை நடத்தி வருகிறார்.வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என கதை,கட்டுரைகள் எழுதி பதிவு செய்யும் நல்ல மனிதர்.எளிமையான நண்பர்.இவர் மூலம் விருதுநகரில் இலக்கிய ஆர்வலர்கள் அறிமுகம் கிடைத்தது. 

இவர்களைத்தவிர பலஇலக்கியவாதிகள் குறிப்பாக திருமங்கலம் ஷாஜகான்,
மீரான்மைதீன்,பாண்டியக்கண்ணன்  குறிப்பிடத்தக்கவர்கள்  நான் பேச
மறந்தாலும் அவர்களாக தொலை  பேசியில்  தொடர்பு   கொண்டு   நலம்   விசாரிக்கும் இலக்கிய படைப்பாளிகள். 

எஸ்.ராமகிருஷ்ணன்,கோவில்பட்டிஉதயசங்கர் இவர்களுடன் அவ்வப்போது உரையாட அனுமதிக்கும் வாசகனாய் வலம் வருகிறேன். 

எனது இலக்கியத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இலக்கிய நண்பர்களும் ளர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்.வட்டம்பெரிதாகும்,வட்டத்தில் வரும் நண்பர்களைப்பற்றி பிரிதொரு சந்திப்பில்,,,,,,/

வியாழன், செப்டம்பர் 20, 2012

நெசவு,,,,,,,


நண்பர்களின் இலக்கிய ஆர்வத்தால் துளிர்ந்த அமைப்பு "இலக்கியா".
26.8.12 ஞாயிற்றுகிழமை மதுரை கிரீன் வாக்கில் கலந்து கொண்டு விருதுநகர் திரும்பும் போது நண்பர் கவிஞர்.சரனிதா இன்று மாலை 6 மணிக்கு இலக்கியா எனும் இலக்கிய அமைப்பு புதியதாக ஆரம்பித்துள்ளோம்,தாங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றார். நண்பர்கள் சந்திக்கும் போது ஏதோ ஏதோ கருத்துக்கள் பற்றி பேசுவோம் அப்புறம் வீடு திரும்பிவிடுவோம் அடுத்த நாள் மறந்துவிடுவோம், நாகர்கோவிலில் இருந்து வந்த நண்பர்தான் சந்திப்பை வாரம் ஒருநாளாவது முறைபடுத்துங்கள் அது மிகபயனுள்ள அனுபவங்களை உங்களுக்கு ஏற்படுத்தும் என ஆலோசனையை கூற அதை இலக்கியா என பெயர்சூட்டி அமைப்பை ஏற்படுத்தியவர் கவிஞர் சரனிதா.
நானும் அன்று மாலை 6 மணிக்கு சென்றேன் அங்கு
திரு.சக்திமுத்து கிருஷ்ணன்,
திரு.சரனிதா,
திரு.பாலசுப்பிரமணி,
திரு.நடராஜன்,
திரு.நரசிம்மன்
திரு.ரகுபதி,
திரு.விமலன்,
திரு.ஆதிநாராயணன்,
திரு.கிருஷ்ணன்,
திரு.சசிக்குமார்,
இவர்களுடன் நானும் கருத்துபட்டரையில் கலந்து கொண்டேன்.

சனி, மே 26, 2012

பக்கத்து தெரு



சூலக்கரைமேடு எனும் பகுதி குடியிருப்புகளாக வளர்ந்து வரும் பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளதால் வேகமாக வீடுகள் அங்குஇங்கும் கட்டப்பட்டும், கொய்யா தோப்புகள் பிளாட்டுகளாக மாறிவரும் பகுதி.
இந்த பகுதியில் நிலங்கள் விலை குறைவாக தான் இருந்தது,அதனால் பலர் வீட்டுமனைகள் வாங்கினர் இதனால் புரோக்கர்களுக்கு கமிஷன் தொகை கிடைப்பதை பார்த்து தள்ளுவண்டியில் அயர்ன் செய்பவரும், அரிசி கடை வைத்தவர்கள் என பலர் புரோக்கர்களாக மாறினர் மாறியவர்கள் கமிஷனுக்கு ஆசைபட்டு இடத்தின் விலையை உயர்த்தினர். அதன்பின்னர் புரோக்கர்கள் சிலர் பிளாட்டுகளை தங்கள் பெயரில் பவராக பதிவு செய்து மேலும் மேலும் இடத்தின் விலையை உயர்த்தி மிக குறைந்த காலத்தில் நாலுமடங்கு உயர்த்திவிட்டனர், பாதைகள் என்பது நேராக இல்லாமல் கோனல்மானலாகவும் ஒரு இடத்தில் பதினைந்து அடியாகவும், சில இடங்களில் இருபதுஅடியாகவும் இருக்கிறது இருபது அடி ரோடு என மணல் லாரிகள் நுழைந்து தடுமாறி போனதும் உண்டு.
வீடுகட்டுபவர்களும் ரோடு நமக்கானது என எண்ணி அங்கேயே மணல்,ஜெல்லி கொட்டி மேலும் பாதையில் தடை ஏற்படுத்தி பாதையில் செல்பவர்கள் சிரமத்தை ஏற்படுத்தியும் வருகின்றனர் பாதையில் செல்பவர்கள் கேள்வி கேட்டால் எதுக்கு இந்த பாதையில் வர என எதிர் கேள்வி கேட்டு பலமுறை சண்டை சச்சரவுகளாகவும் இருக்கும்.
அப்படிபட்ட பாதையில் தான் தினம் அலுவலகமோ அல்லது டவுனுக்கு சென்றாலும் செல்லவேண்டும். அன்றும் என் மகளுடன் பைக்கில் டவுனுக்கு சென்றபோது, அப்பா இந்த பாதையில் வேண்டாம் சுற்றி போகலாப்பா இந்தபக்கம் நாய் விரட்டும்பா என்றால்.
அந்த பாதை முடிந்தவுடன் மெயின் ரோடு வந்து விடும் மேலும் வரிசையாக வீடு இருப்பதால் அந்த இடத்தில் மட்டும் தார்ரோடு போட்டு இருக்கும் அதனால் பலரும் அந்த பாதை வழியாக செல்வார்கள், ஆனால் அந்த பகுதியில் ஒரு நாய் உள்ளது யார் வீட்டு நாய் என்றும் தெரிவதில்லை தெருவில் தான் இருக்கும், பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்களை குலைத்து கொண்டு விரட்டி கடிக்க வரும் பல நேரங்களில் பைக்கில் சென்றவர்கள் கீழேவிழுந்துள்ளனர். அன்றும் அப்பா வரேன்லப்பா பயப்படாதே என அந்தபாதை வழியாகவே சென்றேன், நாயை காணவில்லை தொடர்ந்து போகும்போது ஒரு சந்துக்குள் இருந்து குலைத்து கொண்டு நாய் எங்களை துரத்த மகள் பயத்தில் 'ஆ' எனகத்தி விட்டாள், நான் நாய் கடித்துவிட்டதோ என வண்டியை நிறுத்தி பார்த்தபோது ஒன்றுமாகவில்லை, உடன் கீழே கிடந்த கல்லை எடுத்து நாயின் மீது எறிந்தேன் கல் நாயின் மீது படவில்லே என்றாலும் நாய் ஓடிவிட்டது.
நான் கல்லை எறிந்ததை பார்த்தவுடன் அருகில் இருந்த வீட்டுகாரர், ஏன்சார் நாய் மீது கல்லை எறிகிறீர்கள் என்றார்.
நாய் உங்களதா சார்? என்றேன், இல்லை ஆனா எங்க தெரு நாய், கல்லை கொண்டு எறியகூடாது என கோபமாக சொன்னார், சார் நாய் என் மகளை கடிக்க வந்துச்சு பார்த்தீங்கள்ள, அதற்கு அவர் அதெல்லாம் தெரியாது இந்த நாய் இங்கு இருப்பதால் எங்கபகுதியில் திருடுபயமே இல்லை எனவே நாயை அடித்தால் நாங்க சும்மா இருக்கமாட்டோம் நீங்க வேண்னா வேறு பாதையில் போங்க என கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். மனிதனை நாய் கடித்தாலும் பரவாயில்லை என நினைக்கும் இவர்கள் எல்லாம் என்ன ஜென்மமோ, என மனதில் நினைத்துக்கொண்டு பயந்துபோய் நின்ற மகளுடன் புறப்பட்டேன், அதன் பின் மணைவியுடனோ, மகளுடனோ டவுனுக்கு போகவேண்டுமெனில் பக்கத்து தெரு வழியாக போகாமல்,வேறு பாதையில் சுற்றிபோவேன். ஆனால் நான் அந்த பாதையில் போகும் போது நாய் கடிக்க வந்தால் அதன் மேல் எறிய கல்லை பைக்கில் எடுத்துபோவேன். பலமுறை சென்றபோதும் நாய் தட்டுப்படவில்லை.
அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு வரும் போது பக்கத்து தெரு நாய் தெருவில் , (நாய் தெரு என என் மகள்தான் பெயர் வைத்தாள்) என்னை நாய் மீது கல்லை எறிந்தால் என திட்டியவரின் வீடு முன் கூட்டமாக இருந்தது, கூட்டத்தில் நின்ற நண்பரிடம் என்ன சார் என கேட்டேன் அதற்கு நண்பர் பைக்கில் ஒருத்தர் போனார் அவரை நாய் விரட்டியது அவர் மிரண்டு போய், வீட்டு வாசலில் நின்றகொண்டு இருந்த இந்த வீட்டுகாரர் பையன் மீது மோதி விட்டதால் கால் எலும்பு உடைந்து விட்டது என்றார், வீட்டுகாரர் என்னைபார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டார்.,
நான் சிரித்துக்கொண்டேன்.